சனி, 17 ஜனவரி, 2015

கனிவாக நடந்துக் கொள்வோம்!



    மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ

ஒரு முறை "ஸூப்யானுஸ் ஸவ்ரி" ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தோழர்களை
நோக்கி: "கனிவு என்றால் என்ன?" என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள்:
"அபூ முஹம்மதே நீங்கள் கூறுங்கள் எனக் கூறினார்கள்." அப்போது இமாமவர்கள்:
"அந்தந்த விடயங்களை அதனதன் இடத்தில் மேற்கொள்வதாகும்" என
பதிலளித்துவிட்டு, அதனை பின்வருமாறு விளக்கினார்கள்.


"கடினமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் கடினமாக நடந்து கொள்வதும்,
மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் மென்மையாக நடந்து கொள்வதும்,
வாளேந்திப் போராட வேண்டிய இடத்தில் வாளேந்திப் போராடுவதும், சாட்டையைப்
பயன்படுத்த வேண்டிய இடத்தில் சாட்டையைப் பயன்படுத்துவதுமே கனிவாகும்" என
விளக்கினார்கள்.
"கனிவு" என்ற வார்த்தைக்கு அறபியில் "அர்ரிப்க்" என்று சொல்லப்படும்.
இவ்வார்த்தையின் பொருளை அறபு மொழி அடிப்படையில் நோக்குகையில் அதன்
பொருளானது "உடன்படுதல், ஒரு விடயத்தினை கலவரமின்றி அணுகுதல்" ஆகிய
விளக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இதே கருத்தினை அடிப்படையாகக் கொண்டு,
"நிச்சயமாக அல்லாஹூத்தஆலா அனைத்து விடயங்களிலும் கனிவை
விரும்பக்கூடியவனாக உள்ளான்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியுள்ளார்கள். மேலும், அறிஞர் "லைஸ்" அவர்கள் கூறும் போது:
"கனிவென்பது, ஒருவர் தம் அயலவரோடு கனிவாக நடந்து கொள்வதும், அவர்களுடன்
நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பதுமாகும்" என்கிறார்.

மேலும், இவ்வார்த்தயை இஸ்லாமியப் பரிபாசையின் அடிப்படையில் நோக்குகையில்
அதன் விளக்கமானது பின்வருமாறு அமையும்: "ஒருவர் தம் அயலவருடன் சொல்லாலும்
செயலாலும் கனிவாக நடந்து கொள்வதும், அவர்களுடன் இலகுவான நடைமுறைகளைக்
கையாளுவதுமாகும்." (பத்ஹூல் பாரி: 10ஃ449, தலீலுல் பாலிஹீன்: 3ஃ89)

    கனிவு பற்றி அல்குர்ஆனில்...

அல்லாஹ் கூறுகின்றான்;

''(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக
(இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர்: மேலும், சொல்லில் கடுகடுப்பானவராக
இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள்
பிரிந்து சென்றிருப்பார்கள் ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து
(அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்கக் கோருவீராக! – (அல்குர்ஆன்: ஆல
இம்றான் 159

மேலும், அல்லாஹ் பிறிதோர் இடத்தில் கூறும் போது;

"நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள், நிச்சமயமாக அவன் மிக்க
வரம்பு கடந்து விட்டான்" ஆகவே நீங்கள் இருவரும் கனிவான சொல்லை அவனுக்குச்
சொல்லுங்கள் அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சமடையலாம் (என்று
அல்லாஹ் கூறுகிறான்.) (அல்குர்ஆன்: தாஹா 43,44)

    கனிவு பற்றி ஹதீஸ்களில்.....

"புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஆகிய கிரந்தங்களில் "மாலிக் இப்னு அல்
ஹூவைரிஸ்" ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில், சில ஸகாபாக்கள்
நபியவர்களிடத்தில் 20 நாட்கள் தங்கியிருந்து மார்க்கக் கல்வியினை கற்றுக்
கொண்டு தமது கோத்திரத்தினரிடம் திரும்பிச் செல்ல நாடியபோது, தாம் இவ்வளவு
காலமும் நபியவர்களிடத்தில் கழித்த நாட்களில் நபியவர்கள் தங்களுடன்
எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதைப்பற்றிக் கூறும் போது: "அவர்
அறிவாளியாகவும் கனிவானவராகவும் இருந்தார்" எனக் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக கனிவைக்
கடைபிடிக்கும் எல்லா விடயங்களிலும் அழகு தென்படும், அது
புறக்கணிக்கப்படும் எல்லா விடயங்களிலும் அசிங்கம் தென்படும்"
(அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த உம்மத்திற்கு தலைமை தாங்கக்
கூடிய தலைவர்களுக்காகப் பிரார்த்திக்கும் போதுஸ "இறைவா! எவர் எனது
உம்மத்தின் பொறுப்பை ஏற்று, அவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறாரோ
அவருக்கும் கஷ்டத்தைக் கொடுப்பாயாக! மேலும், எவர் எனது உம்மத்தின்
பொறுப்பை ஏற்று அவர்களுடன் கனிவாக நடந்து கொள்கிறாரோ அவருடனும் நீ கனிவாக
நடந்து கொள்வாயாக!" என்றார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா,
ஆதாரம்: முஸ்லிம்)

கனிவாக நடந்து கொள்ளக்கூடிய சுபாவம் படைத்தவர்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் போது, "எவருக்கு கனிவாக நடந்து
கொள்ளக்கூடிய தன்மை கொடுக்கப்பட்டுள்ளதோ, அவருக்கு நலவில் இருந்தும் ஒரு
பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எவருக்கு கனிவாக நடந்து கொள்ளக்கூடிய
தன்மை கொடுக்கப்படாது தடுக்கப்பட்டுள்ளதோ அவருக்கு நலவில் இருந்தும் ஒரு
பங்கு தடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தா
ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி)

    கனிவு பற்றி அறிஞர்களின் கூற்றுக்கள்...

அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்: "ஒருவரிடத்தில் மார்க்க அறிவுள்ளது
என்பதற்கு சிறந்த அடையாளம் அவர் தனது வாழ்வில் கனிவாக நடந்து
கொள்வதாகும்."

ஹிஷாம் இப்னு உர்வா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தந்தையைத் தொட்டும்
அறிவிக்கையில்: "ஞானத்தில் இருந்தும் எழுதப்பட்டுள்ள விஷயமாவது: "கனிவு
ஞானத்தின் தலையாய அம்சமாகும்."

கைஸ் இப்னு அபீ ஹாஸிம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்: "எவருக்கு உலகில்
கனிவாக நடந்து கொள்ளக்கூடிய பாக்கியம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அது அவருக்கு
மறுமையில் பிரயோசனமளிக்கும்."

வஹ்ப் இப்னு முனப்பிஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்: "கனிவு அறிவுடன்
இணைந்திருக்கும்."

நம் முன்னோர்களில் சிலர் கூறுகையில்: "ஈமானை அறிவு அலங்கரிக்கும் போது
ஈமான் சிறப்படையும், அறிவை செயல் அலங்கரிக்கும் போது அறிவு சிறப்படையும்,
செயலை கனிவு அலங்கரிக்கும் போது செயல் சிறப்படையும், அறிவும் கனிவான
சுபாவமும் இணைந்திருப்பதைவிட சிறந்தது எதுவும் இருக்கமுடியாது."

   கனிவாக நடப்பதால் உண்டாகும் அநுகூலங்கள்

o கனிவு சுவனத்தின் பால் இட்டுச் செல்லும்.

o கனிவு பூரணமான இஸ்லாத்திற்கும் ஈமானுக்கும் அடையாளமாகத் திகழும்.

o அல்லாஹ்வுடைய மற்றும் மனிதர்களுடைய அன்பு கிடைக்கும்.

o மனிதர்களுக்கு மத்தியில் அன்பு நிலவும்.

o கலவரமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கலாம்.

o இன்மை மறுமை இன்பத்திற்கு உருதுணையாக இருக்கும்.

o ஒருவனின் மார்க்க அறிவுக்கும் நற்பழக்கவழக்கங்களுக்கும் சிறந்த
ஆதாரமாகத் திகழும்.
நன்றி ..சகோதரி ரஹமத் பாத்திமா 

1 கருத்து:

  1. மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை, அறிஞர்களின் கருத்துக்களும் அருமை...

    பதிலளிநீக்கு